வவுனியா நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட குடியிருப்பு – வட்டாரம் 5 இற்கான நடமாடும் சேவை – 27.03.2024

வவுனியா நகர சபையின் 2024 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது நடமாடும் சேவையானது பூந்தோட்டம் சனசமூக நிலையத்தில் 27.03.2024 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை வவுனியா நகர சபையினால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. குறித்த நடமாடும் சேவையில் வவுனியா மாவட்டத்தின் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நகர சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். குறித்த தினத்தில் நகர சபையினால் வீதி திருத்த வேலைகள், விளையாட்டு மைதான புனரமைப்பு வேலை, வீதி விளக்குகள் திருத்தம், வடிகாலமைப்பு சுத்திகரிப்பு வேலைகள், நீரிணைப்பு சேவைகள், கழிவற்றல் சேவைகள், சேதன பசளை விற்பனை, வியாபார உரிமம் வழங்குதல், முச்சக்கர வண்டி உரிமம் வழங்குதல், வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ் வழங்குதல், ஆதன பெயர் மாற்று சேவைகள், ஆதன வரியினை செலுத்துதல், விளம்பர அனுமதிகள், கட்டட அனுமதி வழங்குதல், காணி உப பிரிவிடுகை, நகர சபை பொது சுகாதார பரிசோதகர்களின் சுகாதார ஆலோசனைகள், நாய்ப்பட்டி வழங்குதல், நகர சபைக்கு உரித்தான முறைப்பாடுகளுக்கான தீர்வு வழங்குதல் உள்ளடங்கலாக அனைத்து சேவைகளும் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த தினத்தில் வருகை தந்த பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, நகர சபையினால், பூந்தோட்டம் – பெரியார் குளம் வீதி திருத்த வேலை மற்றும் பூந்தோட்டம் மைதான புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும், வீதி விளக்குகளை திருத்தம் செய்வதற்கான கோரிக்கைகள் மக்களால் முன்வைக்கப்பட்டதற்கமைவாக, குறித்த தினத்திலேயே 10 வீதி விளக்குகள் திருத்தம் செய்யப்பட்டது.
மேலும் வீதி திருத்த வேலைகள் தொடர்பில், 06 கோரிக்கைகளும், வடிகாலமைப்பு துப்பரவு செய்தலுக்காக 06 கோரிக்கைகளும், குழாய்க்கிணறு திருத்தம் தொடர்பில் 01 கோரிக்கையும் மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்று தற்போது தொடர் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
குறித்த நடமாடும் சேவையின் போது 4 கழிவகற்றல் வாகனங்கள் திண்ம கழிவகற்றல் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டதுடன், திண்ம கழிவகற்றல் தொடர்பில் 04 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று கழிவகற்றல் நடவடிக்கைகள் அன்றைய தினத்திலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும், விவசாய நடவடிக்கைகளுக்காக நகர சபையால் தயாரிக்கப்பட்ட 262 கிலோ சேதன பசளையானது குறைந்த விலைக்கு (ரூ.25.00 ) பொது மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
மேலும், பொது மக்களிடமிருந்து 13 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததுடன், அனைத்து முறைப்பாடுகளும் அன்றைய தினமே செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரின் நேரடி கள விஜயத்தின் போது தீர்வு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த நடமாடும் சேவையில் கிடைக்கப்பெற்ற 22 வியாபார உரிமங்களுக்கான விண்ணப்பங்கள் அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், நூலக சேவையினை விரிவாக்கும் நோக்கில் 13 நூலக அங்கத்துவ விண்ணப்பங்கள் பரசீலிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு நூலக அங்கத்துவ அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நடமாடும் சேவை நிறைவின் போது 60 இற்கும் அதிகமான பொது மக்கள் வருகை தந்து நகர சபையின் சேவைகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றிருந்த பெரும்பான்மையான கோரிக்கைகள் அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டது.
மேலும், பூந்தோட்டம் சந்தியில் மக்களின் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறாக நிர்மாணிக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையும் நகர சபையினால் அகற்றப்பட்டிருந்தது.
வவுனியா நகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாவது நடமாடும் சேவையினை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு எம்முடன் கைகோர்த்து நின்ற மக்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான நடமாடும் சேவைகள் ஏனைய வட்டாரங்களிலும் நடாத்தப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருவதுடன், நகர சபையின் சேவைகளை திறன்பட வழங்குவதற்கு தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினையும், பங்களிப்பினையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »